Tuesday 2 October 2018

அறுவடை செய்த கறுப்பு வைக்கோல்

Image result for yennai arindhaal ajith

அடிக்கடி அவள் கன்னங்களை
தூர் வாருவது வழக்கம்..
எனக்கென்னவோ அதில் ஒரு
அற்பமான மகிழ்ச்சி..

பல சமயங்களில்
அவள் கைவிரல்களால்
அவற்றைப் பிடுங்கி எறிய முயற்சித்ததுண்டு..!
ஊசி போல அவை குத்திட ,
வலியில் அவள் சிணுங்கியதுண்டு..!
பதிலுக்கு அவள் பிடித்து இழுக்க,
பதறிப்போய் நான் கதறியதுண்டு..!

அன்பு சண்டைக்கு.
தினம் தினம் அரங்கேற்றம் தான்..
இடையில்..,
ஒரு வார பிரிவுக்குப்பின் சந்திக்கிறோம்..

இம்முறை நான்  தூர்வார வில்லை.,
ஆசையில் முத்தமிடவே சென்றேன் ..
எதிர்பாராமல் அவை கன்னங்களை பொத்தலிட
கன்னம் சிவந்து அழுகிறாள் ..,
இம்முறை அவற்றைப் பிடுங்கி எறிய
அவள் முயற்சிக்கவில்லை..
ஆனால்  ஏனோ வலிக்கிறது ..?

கத்தியால் அந்தக் கறுப்பு வைக்கோல்களை
நானே அறுவடை செய்தேன்...
அடுத்தநாள் என்  மகள் , மீசை அறுந்த இடங்களை
தடவி தடவிப் பார்த்து சிரித்தாள் ..
ஒருமுறை சொர்க்கத்திற்கே சென்று விட்டு வந்தேன்..!

#மாறன்

No comments:

Post a Comment